பாடல் 5:
காட்டுள் ஆடும்
பாட்டு உளானை
நாட்டு உளாரும்
தேட்டு உளாரே
விளக்கம்:
நாட்டு=பெருமானே முழுமுதற்பொருள் என்று நிலைநாட்டிய உண்மை; உளார் (மூன்றாவது அடி)=தங்களது உள்ளத்தில் நிலைநிறுத்திய அடியார்கள்; தேட்டு=செல்வம்; உளார் (நான்காவது அடி)=உள்ளத்தில் ஆர்பவர்; ஆர்தல்=திளைத்தல்; பெருமானின் முழுமுதல் தன்மையை உணர்த்து. அந்த உண்மையை தங்களது உள்ளத்தில் எப்போதும் நினைத்து பெருமானை வழ்படும் அடியார்களே சிறந்த செல்வர்கள் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுகின்றார்.
பெருமானின் அருள்செல்வத்தை விடவும் சிறந்த செல்வம் ஏதும் இல்லை என்று உணர்த்தும் இந்த பாடல், நமக்கு சம்பந்தரின் தில்லைப் பதிகத்தின் பாடலை (1.80.5) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. பெருமானின் புகழினைப் பாடுவதால் நாம் பெறுகின்ற இன்பமே சிறந்த இன்பம் என்று இதே பதிகத்தின் நான்காவது பாடலில் கூறிய சம்பந்தர், அவ்வாறு பெருமானின் சிறப்பினை பாடுவது சிறந்த செல்வம் என்று குறிப்பிடுகின்றார். சேண்=ஆகாயம் வேறு எவரிடமும் இல்லாததும் அழிவிலாததும் ஆகிய முக்தி செல்வத்தை உடைய பெருமானே சிறந்த செல்வனாக கருதப் படுகின்றான்
செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்
செல்வ மதி தோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே
பொழிப்புரை:
சுடுகாட்டில் நடனம் ஆடுபவனும் அடியார்கள் சூட்டும் பாமாலைகளை ஏற்றுக் கொள்வானும் ஆகிய பெருமான் ஒருவனே முழுமுதற்கடவுள் என்பதை உணர்ந்து தங்களது மனதினில் நிலையாக அந்த கருத்தினை நிலைநிறுத்தி வணங்கும் அடியார்கள் உண்மையான செல்வமாகிய சிவனின் அருள் பெற்று என்றும் இன்பத்தில் திளைப்பார்கள்.