பாடல் 8:
தூர்த்தன் வீரம்
தீர்த்த கோவை
ஆத்தமாக
ஏத்தினோமே
விளக்கம்:
ஆப்தன் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம் ஆத்தன் என்பது. நெருங்கிய நண்பன் என்று பொருள். நமக்கு உதவி தேவைப்படும் தருணத்தில் நாம் அவனது உதவியை நாடாது இருந்தாலும் தானே முன்வந்து உதவுபவனே நெருங்கிய நண்பனாக கருதப் படுகின்றான். அத்தகைய நெருங்கிய நண்பனாக அடியார்களின் தேவைகளை புரிந்து கொண்டு தானே முன்வந்து உதவி செய்யும் கருணையாளன் என்பதால் பெருமானை ஆத்தன் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். தூர்த்தன்=தாழ்ந்த அறிவினை உடையவன்.
பொழிப்புரை:
தாழ்ந்த அறிவு உடையவனாக, புனிதமான கயிலை மலையினை, இறைவனின் இருப்பிடமாக விளங்கும் மலையினை, பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணனின் வலிமையை அழித்து, பின்னர் தனது தவறினை உணர்ந்த அரக்கன் பெருமானே தனது தலைவன் என்று சாமகானம் பாடி இறைஞ்ச, அவனுக்கு ஒளி பொருந்திய வாளினையும் நீண்ட வாழ்நாளையும் அருளிய கருணையாளனை நமது நெருங்கிய நண்பனாக கருதி அவனைப் புகழ்ந்து வழிபட்டு அவனது கருணைக்கு பாத்திரமாவோமாக.