123. ஓர் உருவாயினை - பாடல்  6---9

ஞானம் ஒளியாக
123. ஓர் உருவாயினை - பாடல்  6---9

    ஓர் ஆல் நீழல் ஒண் கழல் இரண்டும்
    முப்பொழுது ஏத்திய நால்வர்க்கு ஒளி நெறி
    காட்டினை நாட்டம் மூன்றாகக் கோட்டினை
    இரு நதி அரவமோடு ஒரு மதி சூடினை

விளக்கம்:

மேற்கண்ட வரிகளில் ஒன்று இரண்டு மூன்று நான்கு மூன்று இரண்டு மற்றும் ஒன்று ஆகிய எண்கள் ஏறு வரிசையிலும் பின்னர் இறங்கு வரிசையிலும் வருவதை நாம் உணரலாம். பெருமான் அமர்ந்து உபதேசம் செய்த இடம் என்பதால் ஒப்பற்ற ஆலமரத்தின் நிழல் என்று இங்கே சொல்லப்படுகின்றது. ஒண்கழல்=ஒளிவீசும், சிறந்த; அறியாமை என்ற இருளினை போக்குவதால் ஞானம் ஒளியாக உருவகப் படுத்தப்படுகின்றது. நாட்டம்=கண்கள் இரு=பெரிய; கோட்டினை=அழித்தனை; மும்மலங்களையும் அழிக்கும் வல்லமை உடைய பெருமான் என்று இங்கே உணர்த்தப் படுகின்றது.  

உலகங்களை படைத்த போது எங்கும் இருள் சூழ்ந்திருந்த நிலையின் காரணமாக, பிரமன் முதலான உயிர்கள் எதையும் காணமுடியாத வண்ணம் அந்தகாரத்தில் ஆழ்ந்திருந்த படியால், அந்த இருளினை போக்க வேண்டி, சூரியன் சந்திரன் மற்றும் அக்னி ஆகிய மூன்றினையும் தனது மூன்று கண்களாகக் கொண்டு பெருமான் இருளை நீக்கி, பிரமன் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் பொருட்களை காணும் வண்ணம் அருள் புரிந்தான் என்று சான்றோர்கள் விளக்கம் கூறுகின்றனர்.   

பொழிப்புரை:

பெருமானே, ஒளிவீசும் திருப்பாதங்களை உடைய நீ, ஒப்பற்ற ஆலமரத்தின் கீழே அமர்ந்து உன்னை மூன்று போதுகளிலும் புகழ்ந்து வணங்கிய சனகாதி முனிவர்கள் நால்வர்க்கும், அவர்களது அஞ்ஞானத்தை அழிக்கும் வண்ணம் உயர்ந்த நன்னெறியாம் சின்முத்திரை காட்டி ஞானவொளியை வழங்கினாய். சூரியன் சந்திரன் மற்றும் அக்னி ஆகிய மூன்று சுடர்களை மூன்று கண்களாகக் கொண்டுள்ள நீ, ஆணவம் கன்மம் மாயை ஆகிய மூன்று மலங்களையும் அழிக்கும் வல்லமை கொண்டவன் ஆவாய். நீ, பெரிய நதியாகிய கங்கையையும் பாம்பினையும் என்றும் மாறாது ஒற்றைப் பிறையுடன் விளங்கும் சந்திரனையும் உனது சடையில் அணிந்துள்ளாய்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com