123. ஓர் உருவாயினை - பாடல் 25--31

பிரளய காலத்தில்
123. ஓர் உருவாயினை - பாடல் 25--31

பாடல் வரிகள்:

    அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை
    இகலி அமைந்து உணர் புகலி அமர்ந்தனை
    பொங்கு நாற்கடல் சூழ் வெங்குரு விளங்கினை
    பாணி மூவுலகும் புதைய மேல் மிதந்த
    தோணிபுரத்து உறைந்தனை தொலையா இருநிதி
    வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை
    வரபுரம் ஒன்றுணர் சிரபுரத்து உறைந்தனை

    
விளக்கம்:

மேற்கண்ட வரிகளில் ஆறு முதல் ஒன்று வரை எண்கள் வரிசையாக அமைந்துள்ளதை நாம் காணலாம். விரும்பினை அமர்ந்தனை என்ற சொற்களில் உள்ள ஐ சார்ந்த உயிர்மெய் எழுத்து எண் ஐந்திணை உணர்த்துவதாக கொள்ள வேண்டும். பதம்=கால்; அறுபதம்=ஆறு கால்களைக் கொண்டுள்ள வண்டு; இகலி=மாறுபட்டு; பொங்கு நாற்கடல்=நான்கு திசைகளிலிருந்தும் சினத்துடன் பொங்கி எழுந்த; பாணி=நீர்; ஏய்ந்தனை=பொருந்தி இருத்தல் இரு=பெரிய;
 
பொழிப்புரை:

பெருமானே, நீ வண்டுகள் முரலும் சோலைகள் நிறைந்த வேணுபுரம் என்று அழைக்கப் படும் தலத்தை மிகவும் விரும்பி ஆங்கே உறைகின்றாய்; பிரளயத்திலும் அழியாத தனிச் சிறப்பு கொண்டு மற்ற தலங்களிலிருந்து மாறுபட்டு விளங்கும் புகலி என்று அழைக்கப்படும் தலத்தில் அமர்ந்து உள்ளாய்; மிகுந்த சினத்துடன் பிரளய காலத்தில் பொங்கி நான்கு திசைகளிலும் கடல்நீர் சூழ்ந்த போதிலும், அந்த வெள்ளத்தில் மூழ்காது நின்ற வெங்குரு என்று அழைக்கப்படும் தலத்தில் நீ விளங்குகின்றாய்; பிரளய காலத்து வெள்ளம் மூன்று உலகங்களையும் மூழ்கடித்த போதிலும் அந்த வெள்ள நீரினில் மூழ்காது மேலே மிதந்த தோணிபுரம் என்று அழைக்கப்படும் தலத்தில் பெருமானே நீ பொருந்தி உறைகின்றாய்; என்றும் அழியாது இருக்கும் சங்கநிதி பதுமநிதி உடையது போன்று அழியாத செல்வச் சிறப்பினை உடைய பூந்தராய் என்று அழைக்கப்படும் தலத்தில் பெருமானே நீ பொருந்தி உறைகின்றாய்; அடியார்கள் வேண்டும் வரத்தினைத் தரவல்ல சிரபுரம் என்று அழைக்கப் படும் தலத்தில் பெருமானே நீ உறைகின்றாய்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com