பாடல் 3:
அகலமார் தரைப் புகலு நான்மறைக்கு இகலியோர்கள் வாழ் புகலி மாநகர்ப்
பகல் செய்வோன் எதிர்ச் சகலசேகரன் அகில நாயகனே
விளக்கம்:
இகலி=மாறுபட்டு; இகலியோர்=எதிராளியுடன் மாறுபட்டு வாதம் செய்து வெல்லும் தன்மை வாய்ந்த சான்றோர்கள்; தரை=பூமி; பகல் செய்வான்=வெளிச்சம் அளித்து பகலாக மாற்றும் சூரியன்; திவாகரன் என்ற வடமொழிச் சொல்லின் பொருளினை உணர்த்தும் தமிழ்ச்சொல். திவா=பகல்; கரன்=செய்பவன்; சூரியன் எதிர்=சூரியனுக்கு எதிராக இரவில் ஒளிதரும் சந்திரன்; சகலன்= கலைகளை உடையவன்; சேகரன்=முடியில் அணிந்த பெருமான்; புகலும்=சிறப்பித்து சொல்லப்படும். புகலி என்ற பெயரின் இரண்டாவது எழுத்து க. இந்த எழுத்து இரண்டு அடிகளிலும் இரண்டாவது எழுத்தாக வருகின்றது.
பொழிப்புரை:
விரிந்த இந்த உலகிலுள்ளவர்களால் சிறப்பித்து பேசப்படும் நான்கு வேதங்களிலும் தேர்ச்சி பெற்று, எதிராளிகளுடன் மாறுபட்டு சிறந்த முறையில் வாதம் செய்து வெற்றி கொள்ளும் மறையோர்கள் வாழும் புகலி மாநகரில் பொருந்தி உறைபவனும், வெளிச்சத்தை அளித்து பகல் நேரப் பொழுதினை அறிவிக்கும் சூரியனின் நேர் மாறாக இரவு நேரத்தில் ஒளிவீசும் சந்திரனை, பல கலைகள் உடையவனைத் தனது சடையில் அணிந்துள்ளவனும் ஆகிய சிவபெருமானே, உலகத்திற்கு நாயகனாகத் திகழ்கின்றான்.