பாடல் 6:
ஏந்தரா எதிர் வாய்ந்த நுண்ணிடைப் பூந்தண் ஓதியாள் சேர்ந்த பங்கினன்
பூந்தராய் தொழு மாந்தர் மேனி மேல் சேர்ந்திரா வினையே
விளக்கம்:
ஓதி=கூந்தல்; ஓதியாள்=கூந்தலை உடைய உமை நங்கை; ஏந்து=படம் விரிக்கும்; பூந்தராய் என்ற எழுத்தின் இரண்டாவது எழுத்து ந். இந்த எழுத்து இரண்டு அடிகளிலும் இரண்டாவது எழுத்தாக வருகின்றது. மேலும் பல சீர்களிலும் இரண்டாவது எழுத்தாக வருவதை காணலாம்.
பொழிப்புரை:
படம் எடுத்து ஆடும் பாம்பின் படத்தினை ஒத்த மார்பகங்கள் மற்றும் நுண்ணிய இடையினை உடையவளும், பூக்கள் அணியப் பெற்று குளிர்ந்து காணப்படும் கூந்தலை உடையவளும் ஆகிய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகமாகக் கொண்டுள்ள சிவபெருமான் வீற்றிருக்கும் பூந்தராய் திருத்தலத்தை தொழும் மாந்தர்களின் மேல் கெடுதியை ஏற்படுத்தும் தீய வினைகள் நில்லாமல் விலகிவிடும்.