129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 2

பொங்கி வந்த அமுதத்தை
129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 2


பாடல் 2:

    திரு வளரும் கழுமலமே கொச்சை தேவேந்திரன் ஊர்
         அயனூர் தெய்வத்
    தரு வளரும் பொழில் புறவம் சிலம்பனூர் காழி தரு
          சண்பை ஒள்பா
    உரு வளர் வெங்குருப் புகலி ஓங்கு தராய் தோணிபுரம்
          உயர்ந்த தேவர்
 வெருவ வளர் கடல் விடம் அது உண்டு அணி கொள்
          கண்டத்தோன் விரும்பும்             ஊரே  

விளக்கம்:

அயன்=பிரமன்; அயனூர்=பிரமபுரம்; திரு=செல்வம், அழகு; சுவர்பானு என்ற அரக்கன், பாற்கடலிலிருந்து பொங்கி வந்த அமுதத்தை, மோகினியாக வந்த திருமால், வஞ்சகமாக தேவர்களுக்கு மட்டும் அளித்து வந்ததைக் கண்டு, தானும் தேவர்களின் நடுவே அமர்ந்து அமுதம் பெறுவதற்கு முயற்சி செய்தான். தங்களின் இடையே அமர்ந்து அவன் அமுதம் பெற்றதை உணர்ந்து, சூரியனும் சந்திரனும், திருமாலிடம் அவன் வரிசை மாறி அமர்ந்ததை சுட்டிக் காட்டி உணர்த்தியதால், திருமால் அவனது தலையினை வெட்டினார். ஆனால் அமுதம் உள்ளே சென்றதால் சுவர்பானு உடனே இறக்கவில்லை. அவனது தலை சீர்காழி சென்று இறைவனிடம் இறைஞ்சி முறையிட, அரக்கனது உடலுடன் பாம்பின் தலையை பொருத்தியும், அரக்கனது தலையுடன் பாம்பின் உடலை பொருத்தியும் பெருமான் வாழ்வளித்தார். அவர்கள் இருவரும் முறையே இராகு என்றும் கேது என்று அழைக்கப்பட்டனர். இந்த சுவர்பானு எனப்படும் அரக்கனே சிலம்பன் என்று தேவாரப் பாடல்களில் அழைக்கப்படுகின்றான். சுவர்பானுவின் தலை சென்று இறைவனை வழிபட்டமையால் சிரபுரம் என்ற பெயரும் தலத்திற்கு வந்தது. இராகு என்ற பாம்பு வழிபட்டமையால், நாகநாதன் என்று பெருமானும் அழைக்கப் படுகின்றார். எனவே சிலம்பன் என்ற சொல் பெருமானை வழிபாட்டு அருள் பெற்ற சுவர்பானுவை குறிப்பதாகவும், நாகநாத சுவாமி என்ற பெயரினை பெற்ற பெருமானை குறிப்பதாகவும் இரண்டு விதமாக விளக்கம் அளிக்கப்படுகின்றது. இந்த பாடலில் சிரபுரம்  என்ற சொல் இல்லாமல் இருப்பதன் பின்னணியில், சிலம்பனூர் என்ற சொல்லுக்கு சிரபுரம் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. தெய்வத்தரு=கற்பக மரம். கற்பக மரம் தனது நிழலில் அமர்வோர் நினைத்ததை அளிக்கும் என்று கூறுவார்கள். சீர்காழி தலத்தில் உள்ள மரங்கள் செழிப்புடன் வளர்ந்து மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதால், கற்பக மரங்களுக்கு ஒப்பாக இங்கே குறிப்பிடப்படுகின்றன. வேணுபுரம் என்ற பெயர் இந்திரன் வந்து பெருமானை வழிபட்டதால் வந்த பெயர். எனவே தேவேந்திரன் ஊர் என்று வரும் இடங்களில் வேணுபுரம் என்று பொருள் கொள்வது பொருத்தம். ஒண்பா= சிறந்த பாடல்கள்; உருவளர்=புகழ் வளரும்; சான்றோர்கள் மேலும் மேலும் இறைவனைப் புகழ்ந்து பாடுவதால், பெருமானின் சிறப்பும் தலத்தின் சிறப்பும் மேலும் மேலும் வளர்கின்றது என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உயர்ந்த தேவர்=பிரமன் திருமால் இந்திரன் உள்ளிட்ட உயர்ந்த தேவர்கள்; வெருவளர்=அச்சம் வளரும் நிலை;          
 
பொழிப்புரை;

செல்வ வளம் கொழிக்கும் கழுமலம், கொச்சைவயம், தேவேந்திரன் ஊர் என்று அழைக்கப்படும் வேணுபுரம், பிரமபுரம், கற்பக மரத்தினை ஒத்தது போன்று பல விதமான வளங்களை மக்களுக்கு அளிக்கும் சோலைகள் சூழ்ந்த புறவம், சிலம்பனூர் என்று அழைக்கப்படும் சிரபுரம், காழி, தகுதியை உடைய சண்பை, அடியார்கள் பெருமானைப் புகழ்ந்து பாடும் சிறந்த பாடல்களால் மேலும் மேலும் புகழ் வளர்க்கின்ற வெங்குரு, புகலி,  உயர்ந்த தலமாக ஓங்கி நிற்கும் பூந்தராய், தோணிபுரம் ஆகிய பெயர்களுடன் விளங்கும்  சீர்காழி நகரம், திருமால் பிரமன் இந்திரன் உள்ளிட்ட உயர்ந்த தேவர்கள் அஞ்சும் வண்ணம் பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினை உட்கொண்டு, அந்த விடத்தினை தேக்கியதால் ஏற்பட்ட கருமை நிறத்து கறையினை தனது கழுத்திற்கு அணிகலனாக வைத்துக் கொண்டுள்ள நீலகண்டனாக விளங்கும் இறைவன் விரும்பும் ஊராகும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com