முகப்பு ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம்
129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 3
By என். வெங்கடேஸ்வரன் | Published On : 15th May 2019 12:00 AM | Last Updated : 15th May 2019 12:00 AM | அ+அ அ- |

பாடல் 3:
வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் வாழூர்
ஏய்ந்த புறவம் திகழும் சண்பை எழில் காழி இறை கொச்சை அம் பொன்
வேய்ந்த மதில் கழுமலம் விண்ணோர் பணிய மிக்க அயனூர் அமரர் கோன் ஊர்
ஆய்ந்த கலையார் புகலி வெங்குரு அது அரன் ஆளும் அமரும் ஊரே
விளக்கம்:
சிலம்பன்=நாகநாதர்; சிலம்பன் வாழூர்=நாகநாதர் வாழும் சிரபுரம்; அமரர் கோனூர்= வேணுபுரம்; இறை=தலைமைத் தன்மை;
பொழிப்புரை;
புகழ் வாய்ந்த நான்மறைகள், தலத்து மக்களால் போற்றப்பட்டு வளர்க்கப்படும் தோணிபுரம், பூந்தராய், நாகநாதப் பெருமான் வாழும் சிரபுரம், புகழ் பெற்ற புறவம், பெருமையுடன் விளங்கித் திகழும் சண்பை, அழகுடன் விளங்கும் காழி, பல தலங்களுக்கு தலைமையாக விளங்கும் புகழினை உடைய கொச்சைவயம், அழகிய பொன்னால் வேயப்பட்ட மதிலினை உடைய கழுமலம், விண்ணோர்கள் பணிவதால் மிகுந்த சிறப்புடன் விளங்கும் பிரமபுரம், வேணுபுரம், பல கலைகளையும் ஆராய்ந்து அறியும் வல்லமை படைத்த சான்றோர்கள் வாழும் புகலி மற்றும் வெங்குரு என்ற பெயர்களை உடைய சீர்காழி நகரம் பெருமான் எழுந்தருளி ஆளும் தலமாகும்.