பாடல் 6:
குழலின் ஓசை வீணை மொந்தை கொட்ட முழவம் அதிரக்
கழலின் ஓசை ஆர்க்க ஆடும் கடவுள் இருந்த இடம்
சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண்டிரை மொண்டு எறியப்
பழியிலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சரமே
விளக்கம்:
மொந்தை=பறை போன்ற இசைக்கருவி; ஆர்க்க=ஒலிக்க; கழி=உப்பங்கழி; தெண்டிரை=தெண்+திரை;, தெளிந்த நீரினை உடைய அலைகள்; குழவம்=மத்தளம்; ஓதம்=நீர்; மொண்டு=முகந்து;
பொழிப்புரை:
குழலின் ஓசைக்கு பொருந்தும் வண்ணம் வீணை மொந்தை ஆகிய இசைக் கருவிகள் முழங்கவும், மத்தளம் அதிர்ந்து ஒலிக்கவும், தனது கால்களில் பொருந்திய கழல்கள் நடனத்திற்கு ஏற்ப, ஆரவாரித்து ஒலிக்க நடனம் ஆடும் கடவுள் இருக்கும் இடம் பல்லவனீச்சரம் தலமாகும். சுழிகள் பொருந்திய கடல் நீரினில், காவிரி நதி தெளிந்த நீரினை முகந்து எறியும் வண்ணம் விளங்குவதும், பழியின்றி ஒழுக்கமான வாழ்க்கையை தொடர்ந்து நடத்தும் நன்மக்கள் வாழ்வதும் ஆகிய காவிரிப்பூம்பட்டினத்து நகரில் உள்ளது பல்லவனீச்சரம் தலம்.