பாடல் 2:
பட்ட நெற்றியர் நட்டம் ஆடுவர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
இட்டமா இருப்பார் இவர் தன்மை அறிவாரார்
விளக்கம்:
பண்டைய நாளில் தலைவனாக இருப்பவன் நெற்றியில் பட்டம் என்ற அணிகலனை கட்டிக் கொள்வது வழக்கமாக இருந்தது போலும். பட்டிகை என்றும் அழைக்கப்படுகின்றது. நட்டம்= திருக்கூத்து;
பொழிப்புரை:
அனைவர்க்கும் தலைவன் என்பதை உணர்த்தும் வண்ணம் தனது நெற்றியில் பட்டம் எனப்படும் அணிகலனை அணிந்துள்ள பெருமான் நடனம் ஆடுவதிலும் வல்லவராக திகழ்கின்றார். இவர் காவிரிபூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலத்தில் மிகுந்த விருப்பத்துடன் அமர்ந்து அருள் புரிகின்றார். இவரது தன்மை எத்தகையது என்பதை யாரால் அறிய முடியும்.