145. பரசு பாணியர் பாடல் - பாடல் 8

உய்வினை அடையலாம்
145. பரசு பாணியர் பாடல் - பாடல் 8

பாடல் 8:

    பாதம் கை தொழ வேதம் ஓதுவார் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
    ஆதியா இருப்பார் இவர் தன்மை அறிவாரார்

விளக்கம்:

தன்னை வழிபட்டு உலகத்தவர் உய்வடையும் பொருட்டு பெருமான் வேதம் ஓதினார் என்று  சம்பந்தர் கூறுகின்றார். பெருமானை வழிபட்டால் உய்வினை அடையலாம் என்று வேதங்களில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது என்று இங்கே உணர்த்தப் படுகின்றது. உலகத்தவர் உய்யும் பொருட்டு பெருமான் வேதங்களை அளித்தார் என்று சேக்கிழார் உணர்த்தும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இமவானின் மனைவியாகிய மேனை கருவுறாமல் பார்வதி தேவியை பெற்றாள் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. தக்கனது  புதல்வியாய் வளர்ந்த தேவி, அந்த உடலினை இனியும் சுமக்கமாட்டேன் என்று சொல்லி, இறைவனின் அருள் பெற்றுச் சென்று இமயமலையில் உள்ள ஒரு தடாகத்தில் இருந்த தாமரை மலர் மீது குழவியாய் அமர்ந்திருக்க, தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று தவத்தில் ஆழ்ந்திருந்த இமவான் இந்த குழந்தையைக் கண்டு தனது மனைவியின் கையில் கொடுக்க, அவளும் மகிழ்ச்சி அடைந்து இந்த குழந்தையை வளர்த்தாள் என்று திருவிளையாடல் புராணம் குறிப்பிடுகின்றது. எனவே தான் சேக்கிழார் இமயமலையில் தோன்றிய அன்னை என்று இங்கே குறிப்பிடுகின்றார்.    

    தொல்லை மால் வரை பயந்த தூயாள் தன் திருப்பாகர்
    அல்லல் தீர்த்து உலகு உய்ய மறை அளித்த திருவாக்கால்
    தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று
    எல்லையில் வண் புகழாரை எடுத்து இசைப்பா மொழி என்றார்   

    
பொழிப்புரை:

தனது திருவடிகளைத் தொழுது உலகத்தவர் உய்யும் பொருட்டு வேதங்களை அருளிய பெருமான், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக விளங்குகின்றார். இவர் காவிரிப் பூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலத்தில் அமர்ந்து அருள் புரிகின்றார். இவரது தன்மை எத்தகையது என்பதை யாரால் அறிய முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com