பாடல் 9:
படிகொள் மேனியர் கடிகொள் கொன்றையர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
அடிகளா இருப்பார் இவர் தன்மை அறிவாரார்
விளக்கம்:
படிகொள்=பல்வேறு வடிவங்களை எடுக்கும் வல்லமை வாய்ந்தவர்; படி என்ற சொல்லுக்கு உலகம் என்று பொருள் கொண்டு, உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுடன் கலந்து இருப்பவன் என்றும் விளக்கம் அளிக்கின்றனர். இந்த விளக்கம் மிகவும் பொருத்தமானதாக தோன்றுகின்றது. கடி=நறுமணம்; அடிகள்=தலைவன்;
பொழிப்புரை:
உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களின் உடலிலும் உறைந்து அந்த உடல்களை இயக்கும் பெருமான், நறுமணம் மிகுந்த கொன்றை மலர் மாலைகளை அணிந்துள்ளார். இவர் காவிரிபூம்பட்டினத்து பல்லவனீச்சரம் தலத்தில் தலைவனாக இருந்து அருள் புரிகின்றார். இவரது தன்மை எத்தகையது என்பதை யாரால் அறிய முடியும்.