பாடல் 4:
கட்டு அலர்த்த மலர் தூவிக் கை தொழுமின் பொன் இயன்ற
தட்டு அலர்த்த பூஞ்செருந்தி கோங்கு அமரும் தாழ் பொழில் வாய்
மொட்டு அலர்த்த தடம் தாழை முருகு உயிர்க்கும் காவிரிப்பூம்
பட்டினத்துச் சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே
விளக்கம்:
சென்ற பாடலில் பெருமானைக் குறித்து செய்யப்படும் வழிபாடு, நமக்கு நல்வினைகளைத் தேடித் தரும் என்று உணர்த்திய சம்பந்தர், இந்த பாடலில் அத்தகைய வழிபாட்டினை எவ்வாறு தொடங்குவது என்பதை கற்றுக் கொடுக்கின்றார். கட்டு அலர்த்த=அரும்பாக இருந்த நிலை கட்டப்பட்ட நிலை என்று சொல்லப் படுகின்றது. பூவின் நறுமணமும் பூவினில் உள்ள தேனும் எவரும் உணரமுடியாத வண்ணம் இருக்கும் நிலை என்பதால் கட்டுண்ட நிலை என்று சொல்வது மிகவும் நயமாக உள்ளது. கட்டு அலர்த்த மலர் என்று குறிப்பிட்டு, அப்போது மலர்ந்த மலர்கள் என்பதை சம்பந்தர் உணர்த்துகின்றார். இயன்ற= போன்று; முருகு=மணம்; உயிர்க்கும்=வெளியே பரப்பும்;
பொழிப்புரை:
உலகத்தவரே, அரும்பாக கட்டுண்ட நிலையிலிருந்து விடுபட்டு அப்போது மலர்ந்த மலர்களை பெருமானின் திருமேனி மீது தூவி வழிபடுவீர்களாக. மலர்ந்து பொன் தட்டு போன்று காணப்படும் பூக்களை உடைய செருந்தி கொன்றை மரங்களை உடைய சோலையினில், தாழ்ந்த இடத்தினில் உள்ள தாழையின் அரும்புகள் மலர்ந்து மணத்தினை வெளியே பரப்பும் காவிரிப்பூம்பட்டினத்தின் சாய்க்காடு தலத்தில் உறையும் பரம்பொருளாகிய சிவபெருமானின் திருப்பாதங்களை தொழுவீர்களாக.