பாடல் 10:
தடுக்கால் உடல் மறைப்பார் அவர் தவர் சீவர மூடிப்
பிடக்கே உரை செய்வாரொடு பேணார் நமர் பெரியோர்
கடல் சேர் தரு விடம் உண்டு அமுதம் அமரர்க்கு அருள் செய்த
விடை சேர் தரு கொடியான் இடம் விரிநீர் வியலூரே
விளக்கம்:
தடுக்கு=ஓலைப்பாய்; பிடக்கு=பிடகம் எனப்படும் புத்தர்களின் புனித நூல்; சீவரம்=பழுப்பு அல்லது காவி நிறம் ஊட்டப்பெற்ற ஆடை;
பொழிப்புரை:
பனை ஓலைத் தடுக்குகளால் தங்களது உடலை மறைத்துக் கொள்ளும் சமணர்களையும், பழுப்பு அல்லது காவி நிறம் தோய்க்கப்பட்ட ஆடையைத் தங்களது உடலின் மீது போர்த்துக் கொண்டு பிடகம் எனப்படும் நூலின் கருத்துகளை உரைத்து திரியும் புத்தர்களையும் ஒரு பொருட்டாக கருதி அவர்களுடன் நட்பு கொள்வதைத் தவிர்த்து வாழும் நமது பெரியோர்கள், கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினைத் தான் உட்கொண்டு அதன் பின்னர் வந்த அமுதத்தை தேவர்களுக்கு வழங்கி அருள் செய்தவனும், விடையினைத் தனது கொடியில் சித்திரமாக ஏற்றுக் கொண்டவனும் ஆகிய பெருமானை வணங்கி வழிபடுகின்றனர். இவ்வாறு வழிபடப்படும் பெருமான் உறையும் இடம் நீர்வளம் மிகுந்த வியலூர் தலமாகும்.