142. நலச்சங்க வெண்குழையும் - பாடல் 7

நடனம் ஆடுபவரே
142. நலச்சங்க வெண்குழையும் - பாடல் 7

பாடல் 7:

    அடி புல்கு பைங் கழல்கள் ஆர்ப்பப் பேர்ந்து ஓர் அனல் ஏந்தி
    கொடி புல்கு மென் சாயல் உமையோர் பாகம் கூடினீர்
    பொடி புல்கு நூல் மார்பர் புரி நூலாளர் தலைச் சங்கைக்
    கடி புல்கு கோயிலே கோயிலாக கலந்தீரே

விளக்கம்:

பைங் கழல்கள்=பசுமையான பொன்னால் செய்யப்பட்ட வீரக் கழல்கள்; தலத்து அம்பிகையின் திருநாமம் சௌந்தர நாயகி; அந்த பெயரினை நினைவூட்டும் வண்ணம் கொடி போன்ற சாயலை உடைய உமையம்மை என்று இங்கே குறிப்பிடுகின்றார். புல்கு=ஒத்து; கடி=காவல்;

பொழிப்புரை:

திருவடிகளில் பொருந்திய பசும்பொன்னால் செய்யப்பட்ட வீரக் கழல்கள் ஒலிக்கும் வண்ணம் கால்களை பேர்த்து நடனம் ஆடுபவரே, நடனம் ஆடும் தருணத்தில் கையில் அனல் ஏந்தி ஆடுபவரே, அழகிய பூங்கொடியை சாயலில் ஒத்து மென்மையும் அழகும் பொருந்திய உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவரே, திருநீற்றுப் பொடியினை பூசிக்கொண்டும் மார்பினில் பூணூல் தரித்தும் சிறப்புடன் விளங்கும் வேதங்களை நன்றாக கற்று அறிந்தவர்களும் ஆகிய அந்தணர்கள் வாழும் தலைச்சங்கை தலத்தில், உயர்ந்த மதில்களை காவலாகக் கொண்டுள்ள தலத்தில், உள்ள கோயிலுடன் கலந்து, அந்த திருக்கோயிலை உமது  உறைவிடமாக கொண்டுள்ளீர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com