பாடல் 6:
ஏவம் மிக்க சிந்தையோடு இன்பம் எய்தலாம் எனப்
பாவம் எத்தைனையும் நீர் செய்து ஒரு பயனிலைக்
காவல் மிக்க மாநகர் காய்ந்து வெங்கனல் படக்
கோவம் மிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே
விளக்கம்:
ஏவம்=எவ்வம் என்ற சொல்லின் திரிபு, எதுகை கருதி திரிந்தது. எவ்வம்=இகழ்ச்சி; காய்ந்து= கோபம் கொண்டு;
பொழிப்புரை:
குற்றம் மிகுந்து இகழத்தக்க சிந்தனைகளுடன் உலக வாழ்க்கையின் சிற்றின்பங்களை எப்போதும் அனுபவித்துக் கொண்டு, உலக வாழ்க்கை மிகவும் இன்பமயமானது என்ற முடிவுடன் இறைவனை நினையாமல் இருந்து பாவமான வாழ்க்கை வாழ்வதால் நீர் அடையக்கூடிய பயன் ஏதும் இல்லை; ஒன்றுக்கொன்று காவலாக திகழ்ந்து வலிமையான அரணைப் பெற்றிருந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும் கோபித்து எரியச் செய்தவனும், கோபத்தால் சிவக்கும் நெற்றிக் கண்ணினை உடையவனும் ஆகிய இறைவன் உறையும் கோடிகா சென்றடைந்து அவனைத் தொழுது பயன் அடைவீர்களாக.