பாடல் 10:
தட்டொடு தழை மயில் பீலி கொள் சமணரும்
பட்டுடை விரி துகிலினார்கள் சொல் பயனிலை
விட்ட புன் சடையினான் மேதகு முழவொடும்
கொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே
விளக்கம்:
தட்டு=தடுக்கு, பனை ஓலைகளால் செய்யப்பட்ட தடுக்கு; விட்ட=தொங்கவிட்ட; புத்தர்கள் மற்றும் சமணர்களின் உரைகள் நன்னெறிக்கு அழைத்துச் செல்லாது என்பதால் அவர்களின் சொற்கள் பயனற்றவை என்று இங்கே கூறுகின்றார்.
பொழிப்புரை:
பனந்தடுக்கினால் செய்யப்பட்ட ஆடையையும் தழைத்த மயிற்பீலியையும் அணியும் சமணர்கள் மற்றும் பட்டினை விரித்து ஆடையாக போர்த்திக்கொள்ளும் புத்தர்களும், சொல்லும் சொற்கள பயனற்றவை. தொங்கவிட்ட சுருண்ட சடையினை உடையவனும், மேன்மை வாய்ந்த முழவு இசைக்கருவியும் கொட்டும் பறைக்கும் தகுந்த வண்ணம் நடனம் ஆடுபவனும் ஆகிய பெருமான் உறையும் கொடிகா தலம் சென்று அடைந்து வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக