பாடல் 7:
வேள் படுத்து இடு கண்ணினன் மேரு வில்லாகவே
வாளரக்கர் புரம் எரித்தான் மங்கலக்குடி
ஆளும் ஆதிப் பிரான் அடிகள் அடைந்து ஏத்தவே
கோளும் நாளவை போய் அறும் குற்றம் இல்லார்களே
விளக்கம்:
வேள்=மதனவேள், மன்மதன்; படித்திடு=அழித்திடும்; வாளரக்கர்=கொடுமைகள் புரிந்த திரிபுரத்து அரக்கர்கள்; வாட்படையை உடைய அரக்கர்கள் என்று பொருள் கூறினும் பொருந்தும்;
பொழிப்புரை:
தனது தவத்தினைக் கலைக்க முயற்சி செய்த மன்மதனை சுட்டெரித்து அழியும் வண்ணம் விழித்த நெற்றிக்கண்ணை உடைய பெருமான், மேரு மலையினை வில்லாக வளைத்துக் கொண்டு முப்புரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளை எரித்தவன், திருமங்கலக்குடி தலத்தினை ஆளும் தலைவனாக, அனைத்து உயிர்களுக்கும் முன்னே தோன்றியவனாக விளங்குகின்றான். அவனது திருவடிகளைச் சார்ந்து அவனைப் புகழ்ந்து வணங்கும் அடியார்களை, நாட்கள் மற்றும் கோள்கள் முதலியவற்றால் ஏற்படும் தீமைகள் அணுகாது; அவர்கள் குற்றங்கள் ஏதும் இல்லாதவர்களாக திகழ்வார்கள்.