139. சீரினார் மணியும் அகில்  - பாடல் 10

புகழ்ந்து வணங்கும்
139. சீரினார் மணியும் அகில்  - பாடல் 10

பாடல் 10:

    மெய்யின் மாசினர் மேனி விரி துவர் ஆடையர்
    பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடிச்
    செய்ய மேனிச் செழும் புனல் கங்கை செறி சடை
    ஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகாகுமே

விளக்கம்:

மெய்=உடல்; மெய்யின் மாசினர்=அழுக்கேறிய உடலினை உடைய சமணர்கள்; செய்ய மேனி=சிவந்த மேனி; அழகு என்ற சொல் இங்கே பேரின்பம் என்ற பொருளில் கையாளப் பட்டுள்ளது. ஐயன்=தலைவன்; அழகு என்று பொருள் கொண்டு அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றும் விளக்கம் கூறுகின்றனர். பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து வணங்கும் அடியார்களின் உள்ளம் மலர்ந்து நிற்கும் நிலை, அவர்களது முகத்திலும் உடலிலும் வெளிப்படும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.

பொழிப்புரை:

குளிப்பதைத் தவிர்ப்பதால் அழுக்கேறிய மேனியை உடைய சமணர்களும் விரிந்த துவர் ஆடையினைத் தங்களது உடலின் மீது போர்த்துத் திரியும் புத்தர்களும், பெருமானைக் குறித்து இகழ்வாக பேசும் பொய்ச் சொற்களை பொருட்படுத்தாது விட்டுவிடும் புண்ணியர்கள் வாழும் திருமங்கலக்குடி தலத்தில் உறைபவனும், சிவந்த திருமேனியை உடையவனும், செழுமையாக மிகுந்த நீர் வளத்துடன் கீழே பாய்ந்த கங்கை நதியைத் தனது அடர்ந்த சடையில் தாங்கியவனும், அனைவர்க்கும் தலைவனும் ஆகிய பெருமானின்  சிவந்த திருவடிகளை புகழ்ந்து போற்ற வல்ல அடியார்களுக்கு பேரின்ப வாழ்வு அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com