150. அன்ன மென்னடி அரிவை - பாடல் 2

இன்பமே வடிவமாக இருப்பவன் இறைவன்
150. அன்ன மென்னடி அரிவை - பாடல் 2


பாடல் 2:

கோல மாகரி உரித்தவர் அரவொடும் ஏனக்கொம்பு இள ஆமை
சாலப் பூண்டு தண் மதி அது சூடிய சங்கரனார் தம்மைப்
போலத் தம் அடியார்க்கும் இன்பளிப்பவர் பொருகடல் விடம் உண்ட
நீலத்தார் மிடற்று அண்ணலார் சிரபுரம் தொழ வினை நில்லாவே


விளக்கம்:

கோல=அழகிய; மா=பெரிய; ஏனம்=பன்றி; சால=அழகாக அமையும் வண்ணம்; சங்கரன்= அழியாத இன்பத்தைத் தனது உயிர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துபவன், இன்ப வடிவினன்; பொருகடல்=தனது அலைகளால் கரையினை மோதி பேரிறைச்சல் எழுப்பும் கடல்; இன்பமே வடிவமாக இருப்பவன் இறைவன்; தனது அடியார்களையும் தன்னைப் போன்று இன்ப வடிவு உடையவர்களாக மாற்றி அருள் புரிபவன் இறைவன் என்று ஞானசம்பந்தர் இங்கே கூறுவது, நமக்கு அப்பர் பிரானின் நாமார்க்கும் குடியல்லோம் என்று தொடங்கும் பதிகத்தின் பாடல் ஒன்றினை (6.98.10) நினைவூட்டுகின்றது. சிறந்த எட்டு குணங்களை உடைய பெருமான் போன்று தானும் அத்தகைய எட்டு குணங்களைக் கொண்டவனாகத் திகழ்வதால் எவரிடமும் அச்சம் கொள்வதில்லை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். தென்திசைக் கோன்=இயமன். நாணற்றார்=நாணம் இல்லாத சமணர்கள். உடை இல்லாமல் எங்கும் திரிந்தாலும் அதற்காக வெட்கப்படாத சமணர்கள். கோ ஆடி=தலைமைத் தன்மையை உரைத்து. நள்ளாமே விள்ளப் பெறுதல்=விரும்பாது விலகும் நிலை. பொறுக்க முடியாத வயிற்று வலியால் திருவதிகை வந்தடைந்த நிலைக்கும், வயிற்று வலி தீர்க்கப்பட்டு சிவபிரானால் ஆட்கொள்ளப் பட்ட நிலைக்கும் உள்ள மாற்றத்தினை இந்த பாடலில் நாம் காணலாம். பல்லவ மன்னன் என்ன, அவனையும் விட பெரிய நாவலந் தீவினுக்கு அரசன் என்ன, தென் திசைக்கு அதிபதியாகிய இயமன் என்ன, எவரது கட்டளைக்குமே தான் பணிய வேண்டிய அவசியம் இல்லை என்று முழங்குவதை நாம் உணரலாம்.

நாவார நம்பனையே பாடப் பெற்றோம் நாண் அற்றார் நள்ளாமே விள்ளப்பெற்றோம்
ஆவா என்று எமை ஆள்வான் அமரர் நாதன் அயனொடு மாற்கு அறிவரிய
அனலாய் நீண்ட
தேவாதி தேவன் சிவனென் சிந்தை சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து
கோவாடிக் குற்றேவல் செய்கென்றாலும் குணமாகக் கொள்ளோம் எண் குணத்துளோமே


பொழிப்புரை:

அழகிய பெரிய யானையை உரித்தவரும், பாம்பு பன்றியின் கொம்பு, இளமையான ஆமையின் ஓடு ஆகிய பொருட்களை மிகவும் அழகாக தனது திருமேனியில் பூண்டவரும், குளிர்ந்த பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவரும், இன்ப வடிவினனாக இருப்பவரும் ஆகிய சிவபெருமான், தான் அனுபவிக்கும் இன்பத்தினைத் தனது அடியார்களுக்கும் அளிக்கின்றார். தனது அலைக் கரங்களால் மீண்டும் மீண்டும் கரைகளில் மோதி பேரிறைச்சல் ஏற்படுத்தும் கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினை உட்கொண்டு தேக்கியதால் தனது கழுத்தினில் நீலநிறத்து கரையினை உடைய தலைவராகிய சிவபெருமான் சிரபுரம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தினில் உறைகின்றார். அந்த இறைவனைத் தொழும் அடியார்களின் வினைகள் முற்றிலும் நாசமாகி, அத்தகிய அடியார்களுடன் பிணைந்து நில்லாமல் விலகிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com