பாடல் 7:
பேய்கள் பாடப் பல் பூதங்கள் துதி செயப் பிணம் இடுகாட்டில்
வேய் கொள் தோளி தான் வெள்கிட நடமாடும் வித்தகனார் ஒண்
சாய்கள் தான் மிக உடையான் தண் மறையவர் தகு சிரபுரத்தார் தாம்
தாய்கள் ஆயினார் பல்லுயிர்க்கும் தமைத் தொழும் அவர் தளராரே
விளக்கம்:
சாய்கள்=புகழ்; வேய் கொள் தோளி=மூங்கில் போன்று அழகிய தோளினை உடைய காளி; வெள்கிட=நாணம் அடைய; காளி நாணமடையும் வண்ணம் நடனமாடிய பெருமான் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். காளியுடன் போட்டியிட்டு நடனமாடி, காளியை பெருமான் வென்றதை நாம் அனைவரும் அறிவோம். திருவாலங்காடு தலத்தில் உள்ள காளிதேவியின் உற்சவச் சிலை நமது நினைவுக்கு வருகின்றது. நடனப் போட்டியில் தோல்வியுற்ற காளிதேவியின் முகம் தலைகவிழ்ந்த நிலையில் நாணம் பொங்க இருப்பதை நாம் இந்த தலத்தில் காணலாம்.
பொழிப்புரை:
பேய்கள் பாடவும், பூதங்கள் புகழ்ந்து போற்றவும், பிணங்கள் இடப்படும் சுடுகாட்டினில், மூங்கில் போன்று அழகிய தோளினை உடைய காளிதேவி நாணமடையும் வண்ணம் நடனப் போட்டியில் காளியை வென்ற திறமையாளர் சிவபெருமான். சிறந்த புகழினை உடைய மறையவர்கள் வாழும் தகுந்த இடமாகிய சிரபுரம் நகரினில் உறையும் இறைவன், உலகிலுள்ள உயிர்கள் அனைத்திற்கும் தாயாக உள்ளார். இந்த பெருமானைத் தொழும் அடியார்கள், தங்களது வாழ்வினில் துயரங்கள் நீகப்பெற்று தளர்ச்சி ஏதும் அடையாமல் இன்பத்துடன் வாழ்வார்கள்.