சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் இந்திய தூதரகம் சார்பாக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
கடந்த சில வாரங்களாகவே வாட்ஸப் மற்றும் முகநூல் வாயிலாக பிராங்பேர்ட்டில் நடக்கவிருந்த யோகா நிகழ்ச்சி பற்றிய அழைப்பிதழ் பலராலும் பரிமாறப்பட்டுகொண்டிருந்தது. அதுவே நிறைய பேருக்கு இந்நிகழ்ச்சி பற்றி தெரிய உதவியாக இருந்தது. டெக்னாலஜி முன்னேற்றத்தில் இதுபோன்ற சில நல்ல விஷயங்களும் நடக்கத்தான் செய்கிறது.
நேற்று மாலை 5 மணிக்கு பிராங்பேர்ட்டில் உள்ள 'வால்தெர்-பான்-க்ரோன் பெர்க் பிளாட்ஸ்' என்ற இடத்தில நிகழ்ச்சி ஆரம்பமானது. உடலுக்கு இதமாக சூரியன் 30 டிகிரி வெப்பத்தில் பிரகாசிக்க, அருகிலேயே குளிர்ந்த நீரூற்று உள்ளதைக் குதூகலிக்கச்செய்ய, சூழ்நிலைகள் அற்புதமாக அமைந்திருந்தது.
நிகழ்ச்சித் தொடக்கத்தில், தேவதைகள் போல வெள்ளை உடை மற்றும் இறக்கைகளுடன் ஆண், பெண்கள் மேடையில் நின்றுகொண்டிருந்ததைப் பார்க்க, கொள்ளை அழகு!
பிராங்பேர்ட்டின் இந்தியத் தூதரக அதிகாரி பிரதிபா பார்க்கர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். சமஸ்கிருத பாடல் ஒலிக்க நிகழ்ச்சி ஆரம்பமானது.
முன்னதாக வந்து டீ சர்ட் பெற்றுக்கொள்ளலாம் என்று ஏற்கெனவே அறிவித்தபடியால் பலர் சரியான நேரத்திற்கு முன்னதாக வந்து பெற்றுக்கொண்டனர். ஒரு சிலர் தங்களுக்கு வசதியான தளர்வான உடைகளை அணிந்து வந்திருந்தனர். சேலையிலும் சிலரைக் காணமுடிந்தது.
மேடையில் யோகா நிபுணர்கள் செய்து காட்ட, வந்திருந்த அனைவரும் ஆர்வமுடன் யோகா செய்தனர்.
3 வயது குழந்தையும் யோகா செய்ததைப் பார்த்தபோது, துள்ளிக்குதித்த நம் மனதும் அந்த குழந்தையோடு சேர்ந்து யோகா செய்தது.
பிராங்பேர்ட்டின் இந்திய தூதரக அதிகாரி பிரதிபா பார்க்கர் அவர்களும் மற்றவர்களுடன் இணைந்து யோகா செய்தது அவரின் அர்பணிப்புக்கு ஒரு சான்று. அருகே, ஒருசில ஸ்டால்களில் யோகா சம்பந்தமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
கடந்த 15ம் தேதி கொலோன் நகரத்திலும் இந்திய தூதரகம் சார்பாக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
புகைப்படங்கள்: இந்திய தூதரகம், பிராங்பேர்ட்