அமித் மிஸ்ராவுக்கு எதிரான புகாரை வாபஸ் பெறமாட்டேன்: பெண் நண்பர் திட்டவட்டம்!
By DN | Published on : 24th October 2015 12:25 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

அமித் மிஸ்ராவுக்கு எதிரான புகாரை வாபஸ் பெறமாட்டேன் என பெண் நண்பர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இந்திய வீரர்கள் பெங்களூரில் பயிற்சி முகாமில் பங்கேற்றிருந்தனர். அப்போது, இந்திய சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா, தங்கியிருந்த ஹோட்டலில், அவருக்கும் அவரது பெண் நண்பர் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தான் தாக்கப்பட்டதாக மிஸ்ராவின் பெண் நண்பர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸார், மிஸ்ராவின் மீது இரண்டு நாள்களுக்கு வழக்குப் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி மிஸ்ராவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இந்நிலையில் மிஸ்ரா மீதான புகாரை அவரது பெண் நண்பர் திரும்பப் பெற்றதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், தான் புகாரை வாபஸ் வாங்கப்போவதில்லை என்று பெண் நண்பர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது: மிஸ்ராவுக்கு எதிரான புகாரை நான் வாபஸ் வாங்கமாட்டேன். நான் உடல் நீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளேன். கடந்த புதன் கிழமை வரை மிஸ்ரா என்னிடம் பேசிவந்தார். இப்போது அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. பெங்களூரு வந்து இந்த விவகாரத்தைச் சரி செய்கிறேன் என்று என்னிடம் கூறினார். அவர் காவல் நிலையத்துக்கு நேரில் வந்து என்னிடம் பேசவேண்டும். கடந்த நான்கு வருடங்களாக நண்பர்களாக உள்ளோம். அவர் என் கையை முறுக்கினார். இதனால் என் விரல் காயமானது. இதுபோன்று என்னைத் துன்புறுத்தி, அவமானப்படுத்தியதால் தான் காவலர்களிடம் முறையிட்டேன் என்று கூறியுள்ளார்.
ஒருநாள் போட்டித் தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைகிறது. இதற்குப் பிறகு மிஸ்ரா பெங்களூரு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.