செயின்ட் ஜோசப் கல்விக் குழுமம் சார்பில் "ஜெட்ஸ் 2016' என்ற பெயரில் மாநில அளவிலான கல்லூரிகள் இடையிலான விளையாட்டுப் போட்டி சனிக்கிழமை தொடங்குகிறது.
இந்தப் போட்டி 14-ஆவது ஆண்டாக நடைபெறுகிறது. ஆடவர் பிரிவு போட்டி மார்ச் 12 முதல் 14 வரை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியிலும், மகளிர் பிரிவு போட்டி மார்ச் 13, 14 ஆகிய தேதிகளில் செயின்ட் ஜோசப் தொழில்நுட்ப கல்லூரியிலும் நடைபெறுகின்றன.
இதில் கூடைப்பந்து, வாலிபால், கபடி, பால் பாட்மிண்டன், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், செஸ், கால்பந்து ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.12.53 லட்சம் ஆகும். பால் பாட்மிண்டன், கூடைப்பந்து, வாலிபால், கபடி, கால்பந்து ஆகிய போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் அணிகளுக்கு சுழற்கோப்பையுடன் தலா ரூ.10 ஆயிரமும், 2-ஆவது இடம்பிடிக்கும் அணிகளுக்கு சுழற்கோப்பையுடன் ரூ.6 ஆயிரமும், 3-ஆவது இடம்பிடிக்கும் அணிகளுக்கு சுழற்கோப்பையுடன் ரூ.4 ஆயிரமும் ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளன.
டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன் போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு சுழற்கோப்பையுடன் முறையே ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.1000 ரொக்கப் பரிசாக வழங்கப்படுகின்றன.