டப்ளின்: அயர்லாந்து, மே.இ.தீவுகள், வங்கதேசம் இடையே நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அந்த அணி வென்ற பலநாடுகள் பங்கேற்ற முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.
முத்தரப்பு போட்டி இறுதி ஆட்டத்துக்கு மே.இ.தீவுகள், வங்கதேச அணிகள் தகுதி பெற்றன. வெள்ளிக்கிழமை இரவு டப்ளினில் நடைபெற்ற ஆட்டத்தில் மே.இ.தீவுகள் முதலில் ஆடிய நிலையில் 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. (ஷேய் ஹோப் 74, அம்ப்ரீஸ் 69 ரன்களை விளாசியிருந்தனர்.)
இதையடுத்து வங்கதேச அணிக்கு 24 ஓவர்களில் 210 ரன்கள் வெற்றி இலக்காக டக்வொர்த் லெவிஸ் முறையில் நிர்ணயிக்கப்பட்டது.
வங்கதேச அணி 22.5 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
சௌமிய சர்க்கார் 66, மொஸாடேக் ஹூசேன் 52, முஷ்பிகுர் 36 ரன்களை சேர்த்தனர். மே. இ.தீவுகள் தரப்பில் கேப்ரியேல் 2-30, ரெய்ஃபர் 2-23 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆட்டநாயகனாக மொஸாடேக் ஹூசேன் தேர்வு செய்யப்பட்டார்.