இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை ஃபாலோ ஆன் கொடுத்த கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி புரிந்துள்ளார்.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான கடைசி டெஸ்ட் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணி 335 ரன்கள் பின்தங்கியிருந்ததால் இந்தியக் கேப்டன் விராட் கோலி ஃபாலோ ஆன் செய்ய அழைத்தார். விராட் கோலி எதிரணியை ஃபாலோ ஆன் செய்ய அழைப்பது இது 8-வது முறையாகும்.
இதன்மூலம், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எதிரணியை அதிக முறை ஃபாலோ ஆன் செய்ய அழைத்த இந்தியக் கேப்டன் என்ற வரிசையில் முன்னாள் கேப்டன் முகமது அசாருதினை விராட் கோலி பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
எதிரணியை அதிக முறை ஃபாலோ ஆன் செய்ய அழைத்த இந்தியக் கேப்டன்கள்:
விராட் கோலி - 8
முகமது அசாருதின் - 7
மகேந்திர சிங் தோனி - 5
சௌரவ் கங்குலி - 4
ஃபாலோ ஆன் செய்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணி 132 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து மீண்டும் திணறி வருகிறது. அந்த அணி இன்னும் 203 ரன்கள் பின்தங்கியுள்ளதால் இந்திய அணி இந்த ஆட்டத்திலும் இன்னிங்ஸ் வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2-வது டெஸ்ட் ஆட்டத்திலும் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை ஃபாலோ ஆன் செய்ய அழைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.