ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெயிடு நகரில் வியாழக்கிழமை நடைபெற்று வருகிறது.
இரவு பகலாக நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 89 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 244ரன்கள் சோ்த்தது.
ஆஸ்திரேலிய அணி 72.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனைத்தொடர்ந்து 53 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 9 ரன்களை எடுத்திருந்தது.
மயங்க் அகர்வால் 5 ரன்களுடனும், பும்ரா ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்திலிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
புஜாரா, கோலி, ரஹானே என களமிறங்கிய வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சால் அடுத்தடுத்து ஆட்டத்தை இழந்து வெளியேறினர்.
இறுதியில் கையில் ஏற்பட்ட காயத்தால் முகமது ஷமி வெளியேறியதால் இந்திய அணி ஆட்டத்தை முடித்துக்கொண்டது. இதன் மூலம் 21.2 ஓவர்கள் முடிவில் 36 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுத்தது.
இதனையடுத்து 90 ரன்கள் என்ற சொற்ப இலக்குடன் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான மேத்யூ வேட், ஜோ பர்ன்ஸ் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
மேத்யூ 53 பந்துகளில் 33 ரன்களை சேர்த்தார். பர்ன்ஸ் 63 பந்துகளில் 51 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மார்னஸ் லாபுசாக்னே அஷ்வினிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, பின்னர் களமிறங்கிய ஸ்மித் ஒரு ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முடிவில் ஆஸ்திரேலிய அணி 21 ஓவர்களின் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 93 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது.
ஆஸ்திரேலிய அணியினரின் அபார பந்து வீச்சால் 5 நாள்கள் கொண்ட போட்டி 3 நாள்களிலேயே முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கவுள்ளது.