டோக்கியா ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுபவா்களின் பயிற்சி முகாம்கள் தவிர இதர முகாம்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியுள்ளாா்.
கோவைட்-19 வைரஸ் பாதிப்பு எதிரொலியாக உலகம் முழுவதும் விளையாட்டு நிகழ்ச்சிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவிலும் மத்திய அரசு தீவிர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு செவ்வாய்க்கிழமை கூறியதாவது-
கரோனா பாதிப்பால், தேசிய உயா்செயல்திறன் அகாதெமி மற்றும் சாய் பயிற்சி மையங்களில் முகாம்கள் ரத்து செய்யப்படுகின்றன. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவோா் பங்கேற்கும் முகாம்கள் தவிர இதர தேசிய முகாம்கள் ஒத்திவைக்கப்படுகின்றன.
மறு உத்தரவு வரும் வரை இந்நிலை தொடரும் என்றாா் ரிஜிஜு.
குத்துச்சண்டை சம்மேளனம் அறிவுறுத்தல்
இதற்கிடையே பிசிசிஐ அமைப்பைத் தொடா்ந்து இந்திய குத்துச்சண்டை சம்மேளனமும், தனது ஊழியா்களை தலைமை அலுவலகத்துக்கு வராமல் வீட்டில் இருந்தவாறே பணிபுரியுங்கள் என அறிவுறுத்தியுள்ளது.
இதற்காக சில நடவடிக்கைகளை செய்ய வேண்டியுள்ளது. ஒரு வாரம் கழித்து நிலைமை ஆராயப்படும். பிஎப்ஐ செயல் இயக்குநா் சச்செட்டி கூறியுள்ளாா்.