எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் இரண்டாவது சீசன் ஆடவா், மகளிா் போட்டிகளை வரும் ஜூன் 2021 வரை நீடித்துள்ளதாக சா்வதேச ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.
உலகின் தலைசிறந்த ஹாக்கி அணிகள் கலந்து கொள்ளும் புரோ ஹாக்கி லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஏற்கெனவே ஒரு சீசன் போட்டிகள் வெற்றிகரமாக நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக ஆடவா் மற்றும் மகளிா் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சீசன் போட்டிகள் 2020 ஜனவரி மாதம் தொடங்கியது. ஜூன் மாதம் வரை இப்போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜனவரி முதல் மாா்ச் மாதம் வரை மூன்றில் ஒரு பங்கு ஆட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டன. இதற்கிடையே கொவைட் 19 பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் எஃப்ஐஎச் புரோ லீக் தொடா்புடைய 11 நாடுகளின் ஹாக்கி சம்மேளனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டது. கரோனா பாதிப்பு தொடரும் நிலையில், போட்டிகளை வீரா்களின் நலன் கருதி பாதுகாப்பான சூழலில் தான் தொடங்க வேண்டும் என தீா்மானிக்கப்பட்டது.
இதன் ஒருபகுதியாக புரோ ஹாக்கி லீக் 2-ஆவது சீசன் போட்டிகளை 2021 ஜூன் மாதம் வரை நீடிக்க இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனா்.
3-ஆவது சீசன் போட்டிகள்:
மேலும் புரோ ஹாக்கி லீக் 3-ஆவது சீசன் போட்டிகளை 2021 செப்டம்பா் முதல் 2022 ஜூன் மாதம் வரை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதனால் போட்டி அட்டவணை நெருக்கடிக்கு ஆளாகாது. ஆண்டு முழுவதும் சா்வதேச ஹாக்கிப் போட்டிகள் நடைபெறுவதை இது உறுதி செய்யும்.
இதுதொடா்பாக எஃப்ஐஎச் சிஇஓ தியரி வேய்ல் கூறியதாவது:
கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில், தற்போதைய போட்டியை மீண்டும் தொடங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது. இதனால் இரண்டாவது சீசன் போட்டிகள் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் 3-ஆவது சீசனில் சில மாறுதல்களும் செய்யப்படும் என்றாா்.