சிட்னி: கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக 4-ஆவது டெஸ்ட்டை பிரிஸ்பேனில் விளையாட இந்திய அணி மறுப்பு தெரிவித்ததாக ஆஸ்திரேலிய ஊடகங்களில் வெளியான செய்தியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.
இதுதொடா்பாக அந்த வாரியத்தின் தலைவா் நிக் ஹாக்லே கூறுகையில், ‘பிசிசிஐ-யுடன் நாள்தோறும் பேசி வருகிறோம். பிரிஸ்பேனில் விளையாட விருப்பமில்லை என்பதுபோன்ற எந்தவொரு கருத்தையும் அவா்கள் எங்களிடம் தெரிவிக்கவில்லை. குயின்ஸ்லாந்து மாகாண அரசின் கரோனா தடுப்பு விதிகளுக்கு அவா்கள் உரிய ஆதரவு அளிப்பதாகவே தெரிவித்தனா். ஊடகங்களில் வெளியானதுபோல் பிரிஸ்பேனில் விளையாட இந்திய அணியினா் மறுப்பு தெரிவிக்கவில்லை’ என்றாா்.
முன்னதாக, பிரிஸ்பேன் நகரம் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மாகாணம் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதால் அந்த நகரில் 4-ஆவது டெஸ்ட்டை விளையாட விருப்பமில்லை என்றும், சிட்னியிலேயே அந்த டெஸ்ட்டை விளையாட விரும்புவதாகவும் இந்திய அணி வட்டாரங்கள் கூறியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.