ஆஸ்திரேலியாவிலிருந்து வெற்றியுடன் சேலம் சின்னப்பம்பட்டிக்குத் திரும்பிய கிரிக்கெட் வீரர் நடராஜனின் காணொலியைப் பகிர்ந்து முன்னாள் வீரர் சேவாக் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்ற இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் வலைப்பயிற்சி வீரராக தேர்வான சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜன் பின் சக வீரர்களின் காயம் காரணமாக அணியில் இணைந்து சிறப்பாக விளையாடினார்.
ஒரு தொடரில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகியுள்ள முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை நடராஜன் பெற்றார்.
இந்நிலையில் பிரிஸ்பேனிலிருந்து பெங்களூர் வந்த நடராஜன், அங்கிருந்து சொந்த ஊரான சேலத்துக்கு வியாழக்கிழமை வந்தார். மாலை 5 மணி அளவில் சேலம் சின்னப்பம்பட்டிக்கு வந்து சேர்ந்த நடராஜனை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் சின்னப்பம்பட்டியில் திரண்டனர். குதிரை பூட்டிய சாரட் வண்டியில் நடராஜன் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சேவாக் தனது சுட்டுரைப்பதிவில் நடராஜனின் காணொலியைப் பகிர்ந்து தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், “இது தான் இந்தியா. இங்கே கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு மட்டுமல்ல. சேலம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டி கிராமத்திற்கு வந்ததும் நடராஜன் பெரும் வரவேற்பைப் பெற்றார். என்ன நம்பமுடியாத நிகழ்வு” என பதிவிட்டுள்ளார்.