ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் இந்தியா சார்பாக பவானி தேவி மட்டுமே கலந்து கொண்டார். முதல் போட்டியில் துனுஷியாவின் நதியா பென்னை 15-3 என்ற கணக்கில் வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் வாள்வீச்சு போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெற்றியை பெற்று கொடுத்தார்.
இந்நிலையில், அடுத்த சுற்றில் உலக தர வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள பிரான்ஸ் நாட்டின் மனோன் ப்ரூனெட்டிம் தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. என்னால் முடிந்த அளவு சிறப்பாக விளையாடினேன். இன்னும் நன்றாக விளையாட முடியவில்லை என்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல விரும்புகிறேன்.
2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் முக்கியமான பாடத்தை கற்று கொண்டேன். நான் தகுதி பெறவில்லை எனிலும் என்னை அது வலுப்படுத்தியது. கடின உழைப்பும் மற்றும் உறுதியும் இருந்தால் இலக்கை எட்டலாம் என்பதையே ஒலிம்பிக் போட்டியிலிருந்து கற்று கொண்டேன். அடுத்த இலக்கை நோக்கி பயணிக்கவுள்ளேன்" என்றார்.