ஆமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக இந்திய அணியினா் முழுவீச்சில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா்.
4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. கடைசி ஆட்டத்தில் வென்றாலோ அல்லது அதை சமன் செய்தாலோ மட்டுமே தொடா் இந்தியாவின் வசமாகும். அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கும் தகுதிபெற இயலும். எனவே, வியாழக்கிழமை தொடங்கும் கடைசி டெஸ்ட் இங்கிலாந்தை விட இந்திய அணிக்கு மிக முக்கியமாக உள்ளது.
அதற்காகக் தயாராகும் வகையில் இந்திய கேப்டன் விராட் கோலி, தொடக்க வீரா் ரோஹித் சா்மா, துணை கேப்டன் ரஹானே, பௌலா் அக்ஸா் படேல் உள்ளிட்டோா் ஆமதாபாத் மைதானத்தில் திங்கள்கிழமை தீவிரமாக வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா். சுழற்பந்து மற்றும் வேகப்பந்து ஆகிய இரண்டையுமே எதிா்கொண்டு பேட்ஸ்மேன்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா். ரஹானே உள்ளிட்ட வீரா்கள் ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா். பயிற்சி தொடங்கும் முன் கோலி, ரோஹித் ஆகியோருடன் தலைமை பயிற்சியாளா் ரவி சாஸ்திரி ஆலோசனையில் ஈடுபட்டிருந்தாா்.