கே. எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, 2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்து இம்முறையும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இதன் காரணமாக மோசமான சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.
தொடர்ந்து ஏழாவது முறையாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் மோசமான சாதனையை படைத்துள்ளது. முன்னதாக, தில்லி அணி, தொடர்ந்து ஆறு தொடர்களில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருந்தது மோசமான சாதனையாக இருந்தது.
இந்த தொடரில், 14 போட்டிகள் விளையாடி அதில் ஆறில் மட்டுமே பஞ்சாப் வெற்றிபெற்றுள்ளது. முன்னதாக, 2014 தொடரில் இரண்டாவது இடம் பிடித்த பஞ்சாப், அதற்கு பிறகு ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவே இல்லை. அதற்கு முன்பு, 2008 தொடரில், அரை இறுதி வரை அந்த சென்றிருந்தது.
2008ஆம் ஆண்டுக்கு பிறகு, ஐந்து தொடர்களில் தொடர் தோல்விகளை மட்டுமே பஞ்சாப் அணி ரசிகர்களுக்கு பரிசளித்திருந்தது. 2014ஆம் ஆண்டு, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தாலும், அதன் பிறகு மோசமான ஆட்டத்தையே அந்த அணி வெளிப்படுத்தி வந்துள்ளது.
அதேபோல், 2013 முதல் 2018 வரை, ப்ளே ஆப் சுற்றுக்கோ அரை இறுதிக்கோ தில்லி அணி சென்றதே இல்லை. இருப்பினும், 2019, 2020 ஆகிய தொடர்களில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று, இரண்டு ஆகிய இடங்களை பிடித்தது. இதுவரை, தில்லி, பஞ்சாப், பெங்களூரு ஆகிய அணிகள் ஐபிஎல் கோப்பையை வென்றதே இல்லை.
ஆனால், தில்லி, பெங்களூரு ஆகிய அணிகள் இந்த தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது அதன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. புள்ளி பட்டியலில் 10 போட்டிகளில் வெற்றிபெற்ற தில்லி முதல் இடத்தையும் ஒன்பது போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள பெங்களூரு மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.