கரோனா சோதனை முடிவுகள் தாமதமான நிலையில் பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் போட்டியின் ஐஸ் ஹாக்கி ஆட்டத்தில் பங்கேற்ற ரஷிய-கனடா வீராங்கனைகள் முகக் கவசம் (மாஸ்க்) அணிந்து ஆடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெய்ஜிங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ரஷிய-கனடா அணிகள் மோதின. இந்நிலையில் ரஷிய அணியினரின் கரோனா சோதனை முடிவுகள் வெளிவரவில்லை. இதனால் ஆட்டமும் ஒருமணி நேரம் தாமதமானது.
குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ரஷிய அணியினா் முதலில் ஐஸ் மைதானத்துக்கு வந்தனா். ஆனால் கனடா அணி வரவில்லை. சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக கூறினா்.
பின்னா் 1 மணி நேரம் கழித்து ஆட்டம் தொடங்கியது. கனடா-ரஷிய வீராங்கனைகள் முகக் கவசம் அணிந்து ஆடினா். ஆட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் போது, சோதனை முடிவுகள் நெகட்டிவ் என தெரியவந்தது. இதையடுத்து ரஷிய வீராங்கனைகள் தங்கள் முகக் கவசங்களை அகற்றி விட்டு ஆடினா்.
இறுதியாக 6-1 என்ற கோல் கணக்கில் கனடா அணி வெற்றி பெற்றது.