ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே, வெள்ளிக்கிழமை தாய்லாந்தில் உள்ள வில்லாவில் உயிரிழந்து கிடந்தார். மாரடைப்பால் அவர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லும் முன் அவருக்கு இன்று உடற்கூறாய்வு நடத்த திட்டமிடப்பட்டுவருகிறது.
52 வயதான வார்னேவின் மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என தாய்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோ சாமுய்
என்ற தீவில் விடுமுறையை கழிக்கும் வகையில் ஆடம்பர வில்லாவில் அவர் தங்கியிருந்தார்.
வார்னேவின் மறைவு உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய பிரதமர் முதல் உடன் விளையாடிய வீரர்கள் வரை அவரின் மரணத்திற்கு துக்கம் தெரிவித்துவருகின்றனர்.
இதுகுறித்து வார்னேவின் நண்பரும் மேலாளருமான எர்ஸ்கைன் ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நைனுக்கு அளித்த பேட்டியில், "வீட்டு வாசலின் முன் வந்து அவர் நிற்பார் என்று எதிர்பார்ப்பதாக வார்னின் மூத்த மகன் ஜாக்சன் வேதனை தெரிவித்தார். இது ஒரு கெட்ட கனவு போன்றது" என்றார்.
முழு அரசு மரியாதையுடன் அவரின் உடல் அடக்கம் செய்யப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் மாரிசன் அறிவித்துள்ளார்.