ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 15-வது சீசனின் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி லக்னௌவை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குவாலிஃபையர்-2-க்கு தகுதி பெற்றது.
இந்தப் போட்டியில் பெங்களூரு அணிக்காக ரஜத் படிதார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 54 பந்துகளை எதிர்கொண்ட பட்டிதார் 112 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது அதிரடியால் பெங்களூரு அணி 207 ரன்கள் குவித்தது.
பெங்களூரு அணியின் இந்த வெற்றி குறித்து அந்த அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் ஏபி டி வில்லியர்ஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “ ஆர்சிபி, ஆர்சிபி, ஆர்சிபி” எனப் பதிவிட்டுள்ளார்.
சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய பெங்களூரு அணியின் வீரர் ரஜத் படிதாருக்கும் தனது வாழ்த்துகளை டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
டி வில்லியர்ஸ் பெங்களூரு அணிக்காக 184 போட்டிகளில் விளையாடி 39.70 சராசரியுடன் 5,162 ரன்கள் குவித்துள்ளார். டி வில்லியர்ஸ் ஆர்சிபி அணியின் சிறந்த ஆட்டக்காரர். அவர் பெங்களூரு அணிக்காக பலமுறை சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார். ஆர்சிபி அணிக்காக விளையாடிய அவரின் சிறந்த ஸ்கோர் ஆட்டமிழக்காமல் 133 ரன்கள்.
பெங்களூரு அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் குவாலிஃபையர்-2 போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.