இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லீட்ஸில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்றுள்ள இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் சஹால், ஷமிக்குப் பதிலாக குல்தீப், ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
ஆரம்பம் முதல் இலங்கை பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடி அளித்தார் பும்ரா. கருணாரத்னே 10 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக குசால் பெரேராவும் அதே பாணியில் பும்ரா பந்துவீச்சில் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகும் இலங்கை பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. குசால் மெண்டிஸ் ஜடேஜா பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆகி 3 ரன்களில் வெளியேறினார். அடுத்த ஓவர்களில், நன்கு விளையாடி நான்கு பவுண்டரிகள் அடித்த அவிஷ்கா, 20 ரன்களில் தோனியிடம் கேட்ச் கொடுத்து பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் 12 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் என்கிற பரிதாபமான நிலையில் இருந்தது இலங்கை அணி.
இதன்பிறகு ஜோடி சேர்ந்த மேத்யூஸும் திரிமான்னேவும் பொறுப்புடன் விளையாடி மேலும் சரிவு ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் நிதானமாக ரன்கள் சேர்த்தார்கள். ஒருகட்டத்தில் தொடர்ந்து 8 ஓவர்களுக்கு மேல் இலங்கை அணியால் ஒரு பவுண்டரியும் அடிக்கமுடியாமல் போனது. எனினும் 30 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் என்கிற பாதுகாப்பான நிலையை அடைந்தது இலங்கை அணி.
மேத்யூஸ் 76 பந்துகளிலும் திரிமன்னே 63 பந்துகளிலும் அரை சதங்களைக் கடந்தார்கள். பிறகு சிக்ஸர் அடிக்க முயன்று குல்தீப் யாதவிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார் திரிமன்னே. அவர் 53 ரன்கள் எடுத்தார்.
இலங்கை அணி 40 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 85, தனஞ்ஜெயா டி சில்வா 6 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.