இந்திய அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் தலா 1 ரன்னுக்கு ஆட்டமிழந்ததன் மூலம் மோசமான சாதனையை புரிந்துள்ளனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 240 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கியது. ஆனால், இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மோசமான தொடக்கத்தை தந்தனர்.
ரோஹித், கோலி மற்றும் ராகுல் ஆகியோர் தலா 1 ரன்னுக்கு அடுத்தடுத்த ஓவரில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். கிரிக்கெட் வரலாற்றில் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் தலா 1 ரன்னுக்கு ஆட்டமிழப்பது இதுவே முதன்முறை. எனவே, இந்தியாவின் டாப்-3 பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் இந்த மோசமான வரலாற்றுச் சாதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால், 240 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
சற்று முன் வரை இந்திய அணி 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. தோனியும், ஜடேஜாவும் விளையாடி வருகின்றனர். இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 12 ஓவர்களில் 109 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது.