ஜடேஜா, தோனி போராட்டம் வீண்: இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது நியூஸிலாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
நன்றி: டிவிட்டர்/ஐசிசி
நன்றி: டிவிட்டர்/ஐசிசி


உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் எடுத்தது. 

240 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித், ராகுல், கோலி ஆகியோர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன்பிறகு களமிறங்கிய கார்த்திக்கும் வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க 24 ரன்களுக்குள் 4-வது விக்கெட்டையும் இழந்தது இந்திய அணி. 

இதன்பிறகு, ரிஷப் பந்த் மற்றும் ஹார்திக் பாண்டியா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடினர். எனினும், இந்த இணை நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. பந்த் மற்றும் பாண்டிா தலா 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதன்மூலம், இந்திய அணி 92 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

இந்த நிலையில், தோனியுடன் ஜடேஜா இணைந்தார். தோனி விக்கெட்டை பாதுகாத்து விளையாட, ஜடேஜா நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியளிக்கும் வகையில் துரிதமாக விளையாடினார். இதுவரை மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி அதன்பிறகு ஓவருக்கு சராசரியாக 5-க்கு மேல் என்ற நிலையில் விளையாடி வந்தது. இதனால், நியூஸிலாந்துக்கு நெருக்கடி அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஜடேஜாவும் தனது 38-வது பந்தில் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்தார். 

இந்த இணையும் 7-வது விக்கெட்டுக்கு 100 ரன்களைக் கடந்தது. 14 பந்துகளில் 32 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜடேஜா போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 59 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 77 ரன்கள் எடுத்தார். 

எனினும், அடுத்த ஓவரின் முதல் பந்தில் தோனி சிக்ஸர் அடித்து நம்பிக்கையளித்தார். ஆனால், அந்த ஓவரில் கப்திலின் சூப்பர் த்ரோவால் தோனி துரதிருஷ்டவசமாக ஆட்டமிழந்தார். இதனால், இந்திய அணியின் வெற்றி நம்பிக்கை முற்றிலுமாக தகர்ந்தது. தோனி 72 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். 

அதன்பிறகு, புவனேஷ்வர் குமார் மற்றும் சாஹல் ஆட்டமிழக்க இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், நியூஸிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. 

நியூஸிலாந்து தரப்பில் ஹென்ரி 3 விக்கெட்டுகளையும், போல்ட் மற்றும் சான்ட்னர் தலா 2 விக்கெட்டுகளையும், பெர்குசன் மற்றும் நீஷம் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹென்ரி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com