உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பே தெரிவித்தது போல் இங்கிலாந்து தான் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. இரண்டு அணிகளுமே இதுவரை ஒருமுறை கூட உலகக் கோப்பையை வெல்லாததால், நாளைய இறுதி ஆட்டத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், உலகக் கோப்பையை வெல்லும் அணி குறித்து ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது,
"இங்கிலாந்து வெற்றி பெறும் என்று நினைக்கிறேன். இங்கிலாந்தை வீழ்த்துவது மிகவும் கடினம் என்று தொடர் தொடங்குவதற்கு முன்பே நான் தெரிவித்தேன். இங்கிலாந்து தான் விருப்பமான அணியாக இருந்தது, அதில் தற்போது எந்த மாற்றமும் இல்லை.
நியூஸிலாந்து அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேற சிறப்பாக செயல்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டு முறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது மிகச் சிறந்த சாதனை. கடந்த இறுதி ஆட்டத்தில் விளையாடிய அனுபவம் நியூஸிலாந்துக்கு உள்ளது. அதேசமயம், இறுதி ஆட்டத்தில் விளையாடிய அனுபவம் எந்தவொரு இங்கிலாந்து வீரர்களுக்கும் கிடையாது.
எனினும், இங்கிலாந்து அணியிடம் கொஞ்சம் கூடுதல் தரம் உள்ளது. அது நியூஸிலாந்து வெற்றி பெறுவதை தடுக்கும்" என்றார்.