உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.
2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் மிக பரபரப்பான ஆட்டம் எனக் கூறப்பட்டுள்ள இந்த ஆட்டம், மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ரோஹித் சர்மா, விராட் கோலியின் அபார ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்களை குவித்தது இந்திய அணி. ஒரு நாள் ஆட்டத்தில் துரிதமாக 11,000 ரன்களை கடந்து, ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்தார் கேப்டன் விராட் கோலி.
பாகிஸ்தான் ஆடிய போது, மழை குறுக்கிட்டது. இதனால், டிஎல்எஸ் முறைப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டு 40 ஓவர்களில் 302 ரன்களைக் குவிக்க வேண்டும் என கடின இலக்கு பாக். அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியத் தரப்பில் விஜய் சங்கர், குல்தீப் யாதவ், பாண்டியா ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசி பாக். சரிவுக்கு வித்திட்டனர். இந்த வெற்றி மூலம் உலகக் கோப்பையில் 7-ஆவது முறையாக பாகிஸ்தானை வென்றுள்ளது இந்தியா.