உலகக் கோப்பைப் போட்டியின்போது முதல் பதினைந்து நாள்களுக்கு இந்திய வீரர்கள் தங்கும் விடுதிகளில் அவர்களுடைய மனைவி, குடும்பத்தினர் தங்கக்கூடாது என்று பிசிசிஐ கட்டளையிட்டிருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் முடியும்வரை இந்த விதிமுறையைப் பின்பற்ற அறிவுறுத்தியிருந்தது.
கடந்த ஞாயிறன்று பாகிஸ்தானுக்கு எதிராக அபார வெற்றி பெற்றது இந்திய அணி. அடுத்த ஆட்டம், சனியன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்திய வீரர்கள் திங்கள், செவ்வாய் ஆகிய நாள்களில் பயிற்சி மேற்கொள்ளாமல் குடும்பத்தினருடன் வெளியே சென்று பொழுதைப் போக்கினார்கள். விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா, இங்கிலாந்துக்குச் சென்று கோலியுடன் ஒன்று சேர்ந்து லண்டன் முழுக்கச் சுற்றியுள்ளார். தவன் மற்றும் ரோஹித் சர்மாவின் குடும்பத்தினர்கள் ஒன்று சேர்ந்து வெளியே சுற்றியுள்ளார்கள். இத்தகவலை இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார் தவன்.
இன்று முதல் இந்திய அணியினர் தீவிரப் பயிற்சியில் ஈடுபடவுள்ளார்கள்.