நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 500 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (செவ்வாய்கிழமை) ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் மற்றும் ஃபின்ச் மீண்டும் ஒரு நல்ல தொடக்கத்தை தந்தனர்.
இந்த ஆட்டத்தில் வார்னர் 53 ரன்கள் எடுத்தார். ஃபின்ச் 100 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் வரிசையில் வார்னர் மற்றும் ஃபின்ச் முறையே முதலிரண்டு இடத்துக்கு முன்னேறியுள்ளனர்.
53 ரன்கள் எடுத்த வார்னர் 500 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். சதம் அடித்த ஃபின்ச் 496 ரன்களுடன் 4 ரன்கள் பின்தங்கி 2-வது இடத்தில் உள்ளார். ஷாகிப் அல் ஹசன் 476 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளார். இந்த ஆட்டத்தில் சொதப்பிய இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் 432 ரன்களுடன் 4-வது இடத்தில் உள்ளார்.
இந்திய அணியில் ரோஹித் சர்மா 4 ஆட்டங்களில் விளையாடி 320 ரன்களுடன் 7-வது இடத்தில் உள்ளார்.
இதில், வார்னர் மற்றும் ஃபின்ச் 7 ஆட்டங்களில் விளையாடியுள்ளனர், ஆனால், ஷாகிப் 6 ஆட்டங்களில் தான் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.