ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 286 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து முக்கியமான மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய (செவ்வாய்கிழமை) ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஃபின்ச் சதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அரைசதம் அடித்தார். வார்னர் 53 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். கேப்டன் ஃபின்ச் சதம் அடித்த கையோடு 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இந்த இணை அமைத்து தந்த அடித்தளத்தை ஆஸ்திரேலியாவின் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் தவறவிட்டனர். கடைசி கட்டத்தில் அலெக்ஸ் கேரி மட்டும் ஓரளவுக்கு விளையாடி ஆட்டமிழக்காமல் 24 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்தார்.
இதனால், 300 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்களுக்கு கட்டுப்பட்டது.
286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.
ஆட்டம் தொடங்கிய 2-வது பந்திலேயே பெஹ்ரன்டோர்ஃப் ஸ்விங்கில் ஜேம்ஸ் வின்ஸ் போல்டானார். தொடர்ந்து களமிறங்கிய ரூட், ஸ்டார்க்கின் வேகம் கொண்ட ஸ்விங் பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். ஸ்டார்க்கின் அடுத்த ஓவரில் இங்கிலாந்து கேப்டன் மார்கனும் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
சற்று முன் வரை, 8 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. பேர்ஸ்டோவ் 16 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் ரன் கணக்கை தொடங்காமலும் விளையாடி வருகின்றனர்.