ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கடந்த 1975 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2019 ஒருநாள் உலகக் கோப்பை, வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையே கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. காயம் காரணமாக ஜாதவ் மற்றும் விஜய் சங்கர் ஆகிய இருவரும் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் விஜய் சங்கர், வலைப்பயிற்சியின்போது காயமடைந்துள்ளார். பேட்டிங் செய்தபோது அவருடைய வலக்கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பயிற்சியிலிருந்து பாதியில் விலகினார். அவருக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் விஜய் சங்கருக்கு ஏற்பட்ட காயம் குறித்து ட்விட்டரில் இன்று விளக்கம் அளித்துள்ளது பிசிசிஐ. அதில் கூறியுள்ளதாவது:
வெள்ளியன்று, பயிற்சியின்போது விஜய் சங்கருக்குக் கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் அவருக்கு எலும்புமுறிவு எதுவும் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவருடைய அந்தக் காயத்திலிருந்து மீண்டு வர பிசிசிஐ மருத்துவக் குழு உதவி வருகிறது என்று பிசிசிஐயின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.