உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் நான்தான் என்று பிரேஸில் நட்சத்திர வீரர் நெய்மர் கூறியுள்ளார்.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பிஃபா சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி ரஷியாவில் ஜூன் 14 முதல் தொடங்கியுள்ளன. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறும் 64 ஆட்டங்களில் 32 நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.
ஞாயிறு அன்று நடைபெறவுள்ள தனது முதல் ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தை எதிர்கொள்கிறது பிரேஸில். இந்நிலையில் நெய்மர் ஒரு பேட்டியில் கூறியதாவது:
தன்னடக்கமின்றிச் சொல்வதென்றால், உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் நான்தான் என நினைக்கிறேன். மெஸ்ஸியும் ரொனால்டோவும் வேற்று கிரகத்திலிருந்து வந்தவர்கள். எனவே நானே நெ.1 என்று சற்றுக் கிண்டலாகவும் கூறியவர் பிறகு இந்த உலகக் கோப்பைப் போட்டி எந்தளவுக்குத் தனக்கு முக்கியம் என்று கூறியதாவது:
தனிப்பட்ட புகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவதை விடவும் என் கவனம், ரஷியாவில் பிரேஸில் அணியை வெற்றி பெறச் செய்து உலகக் கோப்பையைக் கைப்பற்றுவதில்தான் உள்ளது. காயத்திலிருந்து நான் மீண்டுவந்துவிட்டேன். நல்ல உடற்தகுதியுடன் உள்ளேன். கடந்த உலகக் கோப்பையை விடவும் இந்தமுறை பக்குவத்துடன் செயல்படுவேன் என்று கூறியுள்ளார்.