ஹைதராபாத் அணியில் நடராஜனுக்கு மீண்டும் இடமில்லை: காரணம் என்ன?

அவர் எப்போது விளையாட வேண்டும் என்பதை மருத்துவக் குழு தீர்மானிக்கும் என்றார். 
ஹைதராபாத் அணியில் நடராஜனுக்கு மீண்டும் இடமில்லை: காரணம் என்ன?

சென்னையில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் மூன்று மாற்றங்கள். ஃபெபியன் ஆலன், மோசஸ் ஹென்ரிகஸ், எம். அஸ்வின் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். சன்ரைசர்ஸ் அணியில் கேன் வில்லியம்சன், கெதர் ஜாதவ் இடம்பெற்றுள்ளார்கள். சிஎஸ்கே அணியில் விளையாடி வந்த கெதர் ஜாதவ், முதல்முறையாக சன்ரைசர்ஸ் அணியில் விளையாடுகிறார். மணிஷ் பாண்டேவுக்குப் பதிலாக சித்தார்த் கெளல் இடம்பெற்றுள்ளார்.  

இதுவரை விளையாடிய மூன்று ஆட்டங்களில் பஞ்சாப் அணி ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது. சன்ரைசர்ஸ் அணி இதுவரை ஒரு வெற்றியையும் பெறவில்லை. இதனால் இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் முக்கியமானதாக உள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து 2-வது ஆட்டமாக சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன் இடம்பெறவில்லை.

கேகேஆர், ஆர்சிபி அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் விளையாடிய நடராஜன் 1/37, 1/32 எனப் பந்துவீசியிருந்தார். மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் நடராஜன் விளையாடவில்லை. அதேபோல பஞ்சாப்புக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் அவர் இடம்பெறவில்லை.

அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாலும் முக்கியமான ஆட்டங்களில் விளையாட வேண்டும் என்பதால் அவ்வப்போது ஓய்வளிப்பதற்காகவும் இன்றைய ஆட்டத்தில் நடராஜன் இடம்பெறவில்லை எனத் தகவல்கள் கூறுகின்றன. மும்பைக்கு எதிராக நடராஜன் விளையாடாதது பற்றி சன்ரைசர்ஸ் ஆலோசகர் விவிஎஸ் லக்‌ஷ்மண் கூறியதாவது:

காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் நடராஜன் விளையாடவில்லை. அதனால் தான் கலீல் அஹமது அணியில் சேர்க்கப்பட்டார். நடராஜனின் உடல்நிலையைக் கவனித்து அவர் எப்போது விளையாட வேண்டும் என்பதை மருத்துவக் குழு தீர்மானிக்கும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com