கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தில் 10 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தில்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள அஸ்வின், இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து திடீரென பாதியில் விலகினார். குடும்பத்தினர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்குத் துணையாக இருப்பதற்காக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுகிறேன். வாய்ப்பிருந்தால் மீண்டும் விளையாட வருகிறேன் என்றார்.
இந்நிலையில் அஸ்வின் குடும்பத்தில் 10 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதுபற்றிய தகவலை அஸ்வினின் மனைவி ப்ரீத்தி, ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஒரே வாரத்தில் 6 பெரியவர்களும் 4 குழந்தைகளும் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். வெவ்வேறு வீடு, மருத்துவமனைகளில் அனைவரும் சிகிச்சை பெறுகிறார்கள். கரோனாவால் பாதிப்படைந்தால் உடல்நலம் விரைவாக குணமாகிறது, ஆனால் மனநலம் மிகவும் பாதிப்படைகிறது. 5 - 8வது நாள்கள் எனக்கு மிகவும் மோசமாக இருந்தன. எல்லோரும் உதவிக்கு இருந்தாலும் யாரும் இல்லாததுபோல் இருக்கும். நம்மைத் தனிமைப்படுத்தும் நோய் இது. அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.