ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியை மீண்டும் நடத்துவது எப்போது?: பிசிசிஐ துணைத் தலைவர் தகவல்

ஐபிஎல் போட்டியைத் தற்போது ஒத்திவைப்பது என்கிற பிசிசிஐயின் முடிவு சரியானது.
ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியை மீண்டும் நடத்துவது எப்போது?: பிசிசிஐ துணைத் தலைவர் தகவல்

இந்தியாவில் நிலவும் கரோனா சூழலை முன்வைத்து ஐபிஎல் போட்டியை மீண்டும் தொடர்வது குறித்த முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. 

கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி வீரா்களான வருண் சக்கரவா்த்தி, சந்தீப் வாரியர், சிஎஸ்கே பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல். பாலாஜி, பேருந்துப் பராமரிப்பாளர் ஆகியோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்கள். இதனால் இரு அணி வீரர்களும் விடுதி அறையில் தனிமைப்படுத்தப்பட்டார்கள். 

இதையடுத்து கொல்கத்தா - பெங்களூா் அணிகள் நேற்றிரவு மோத இருந்த ஆட்டமும் நாளை நடைபெறுவதாக இருந்த சிஎஸ்கே - ராஜஸ்தான் ஆட்டமும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. 

கரோனா பாதிப்பு சன்ரைசர்ஸ் அணியையும் விட்டுவைக்கவில்லை. அந்த அணியின் விக்கெட் கீப்பர் சஹா, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இன்று நடைபெறுவதாக இருந்த மும்பை - சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒத்திவைக்கப்பட இருந்தது. தில்லி வீரர் ஒருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

கரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் ஐபிஎல் போட்டியைத் தொடர்ந்து நடத்துவது குறித்த கேள்விகளும் எழுந்தன. இதையடுத்து ஐபிஎல் 2021 போட்டி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரபூர்வ அறிவித்துள்ளது. வீரர்கள் மற்றும் அணிகளின் பாதுகாப்பு கருதி ஐபிஎல் 2021 போட்டி ஒத்திவைக்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்ற அனைவரும் பாதுகாப்பாகப் பயணம் செய்து வீடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்து தரும். ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ட்விட்டரில் இதுபற்றி கூறியதாவது:

ஐபிஎல் போட்டியைத் தற்போது ஒத்திவைப்பது என்கிற பிசிசிஐயின் முடிவு சரியானது. மீண்டும் எப்போது தொடர்வது, எந்தக் காலக்கட்டத்தில் நடத்துவது என்பது கரோனா சூழலைப் பொறுத்து பிறகு முடிவு செய்யப்படும். வீரர்கள், நிர்வாகிகளின் நலனை முன்வைத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com